தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனையா? உண்மை என்ன? துறை அமைச்சரே கொடுத்த பரபரப்பு தகவல்..!!

tasmac minister vignesh

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் போல டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுதான் மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் முன்பதிவு திட்டமானது தற்போது முதற்கட்டமாக சோதனை முயற்சியாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், அனைத்து பிராண்ட் மதுபானங்களும் எவ்வித தங்கு தடையுமின்றி மக்களுக்குக் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் நடைமுறை கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தொடர்கிறது. இந்த முறைகேட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தவே புதிய தொழில்நுட்பத் திட்டம் கொண்டுவரப்படுகிறது” எனச் சுட்டிக்காட்டினார்.

அரசின் வருவாய் இலக்கு மற்றும் கடைகளின் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், “மதுபானங்கள் விற்பனை மூலம் அரசுக்கு வருமானத்தை பெருக்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. அதேநேரத்தில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்படாது. டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் காரணமாகவே அரசுக்கான வருவாய் அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் மதுக்கடைகள் கண்டறியப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்றும், பார்களின் அவல நிலையை சீரமைக்க தேவையான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!

You May Like