ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு தாய்க்கும் மறக்க முடியாத தருணம். அந்த நேரத்தில் ஏற்படும் வலி, பதற்றம் என அனைத்தையும் தாண்டி குழந்தையைப் பாதுகாப்பாக உலகிற்கு கொண்டு வருவது தாயின் அளவற்ற மன மற்றும் உடல் வலிமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது வியட்நாமில் நடந்துள்ள ஒரு சம்பவம்.
வியட்நாமில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். மருத்துவமனையை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி சில நிமிடங்களிலேயே தீவிரமடைந்த நிலையில், மருத்துவமனைக்குள் செல்வதற்குள் எதிர்பாராத விதமாக குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவமனை அருகே இந்த சம்பவம் நடந்ததால், அங்கிருந்த மருத்துவ ஊழியர்களும் பொதுமக்களும் உடனடியாக உதவிக்கு வந்துள்ளனர். தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையை அடைவதற்கு முன்பே ஏற்பட்ட இந்த எதிர்பாராத பிரசவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
வலியை தாங்கிக்கொண்டு குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுத்த அந்த தாயின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரசவ நேரத்தில் பெண்கள் வெளிப்படுத்தும் மன உறுதியும் உடல் வலிமையும் எவ்வளவு அசாத்தியமானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: 3 பிள்ளைகள் இருந்தும் நேரில் வர நேரமில்லை!… வீடியோ காலில் நடந்த தந்தையின் இறுதிச்சடங்கு!



