ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அறிமுகமான சிறுமியை கடத்திச் சென்று கொடூர சித்திரவதை செய்த வாலிபரை, செல்போன் சிக்னல் மற்றும் உணவு டெலிவரி முகவரியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேமிங் செயலிகள் வழியாக தானேவைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற பிபிஏ மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, தோழியுடன் வணிக வளாகத்திற்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற அந்தச் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்தபோது ஆகாஷ் மீது சந்தேகம் எழுந்தது.
விசாரணையில், நாக்பூரில் உள்ள தனது வாடகை வீட்டிற்குச் சிறுமியை அழைத்துச் சென்ற ஆகாஷ், கடந்த இரண்டு நாட்களாக அவரைச் சிறைவைத்து பாலியல் பலாத்காரம், கொடூர சித்திரவதைகளில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து, காவல்துறையினர் ஆகாஷின் பெற்றோர் மூலமாக அவருக்கு அழுத்தம் கொடுத்து வீட்டிற்கு வருமாறு தூண்டினர். காவல்துறை தன்னைத் தீவிரமாகத் தேடுவதை உணர்ந்த ஆகாஷ், தான் பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் போனில் பேசுமாறு சிறுமியை மிரட்டியுள்ளார். அதே நேரத்தில், பசியின் காரணமாக தனது கைபேசி வாயிலாக உணவும் ஆர்டர் செய்துள்ளார்.
சிறுமி தனது பெற்றோரிடம் பேசிய செல்போன் சிக்னல் அமைவிடமும், உணவு ஆர்டர் செய்யப்பட்ட முகவரியும் ஒரே இடத்தை இருப்பதை சைபர் க்ரைம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தாமதிக்காமல் குறிப்பிட்ட முகவரிக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு எச்சரிக்கை..!! RBI வெளியிட்ட புது ரூல்ஸ்..!! 1ம் தேதி முதல் அமல்..!!



