சென்னை பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகாமையிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த முதலமைச்சரின் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இடநெருக்கடி காரணமாக முழு தலைமை செயலகத்தையும் வேறு புதிய இடத்திற்குத் மாற்றுவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதுள்ள தலைமைச் செயலகத்தின் பெரும் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், கடுமையான இடநெருக்கடியும் நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், பின்னர் வந்த ஜெயலலிதா ஆட்சியில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதேபோல, பட்டினம்பாக்கம் சிக்னல் அருகே உள்ள அரசு நிலத்தில் தலைமைச் செயலகம் கட்ட இரு தலைவர்களும் பரிசீலித்த போதிலும், அது கடலோரப் பகுதி என்பதால் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் அபாயங்களை சுட்டிக்காட்டி அதிகாரிகள் அப்போது ஆட்சேபனை தெரிவித்தனர்.
தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள சுமார் 17 ஏக்கர் அரசு நிலம், புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என முதலமைச்சர் விஜய் தரப்பு கருதுகிறது. அங்கிருந்து எளிதில் நடந்து செல்லும் தூரத்திலேயே முதலமைச்சரின் இல்லமும் அமைந்துள்ளது. ஏற்கனவே கடலின் எழில்மிகு தோற்றத்தைக் காணும் வகையிலேயே கோட்டையில் அவரது அறை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், பட்டினம்பாக்கத்தில் கடலுக்கு மிக அருகில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை முதலமைச்சர் விஜய்யும் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, குறிப்பிட்ட அந்த இடத்தில் அரசுப் பொறியாளர்கள் முதற்கட்ட நில ஆய்வுகளை நடத்தியுள்ளனர். அடுத்தகட்ட ஆய்வுகளின் முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



