இந்தியாவில் பாலில் கலப்படம் செய்வது நீண்ட காலமாகவே முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் சோதனைகளில், நுகர்வோரின் உடல்நலத்தையும், பால் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் பல்வேறு கலப்பட முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FoodPharmer-க்கு அளித்த பேட்டியில் பேசிய துக்காராம் முண்டே, மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட விசாரணையின்போது செயற்கை மற்றும் ரசாயனப் பால் தயாரிக்கப்படும் முறைகள் குறித்து தெரியவந்ததாகக் கூறினார். அவரது கூற்றுப்படி, சிலர் ஸ்கிம் மில்க் பவுடரை விநியோகித்தும், மற்றொரு தரப்பினர் அதனுடன் கலப்பதற்குத் தேவையான ரசாயனங்கள் மற்றும் எமல்சிஃபையர்களை வழங்கியும் செயல்பட்டுள்ளனர். மேலும், காஸ்டிக் சோடா உள்ளிட்ட சில பொருட்களுடன் ஷாம்பூவும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்படும் செயற்கைப் பாலை சாதாரண பாலுடன் கலந்து அதன் அளவை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு பால் தயாரித்து விற்பனை செய்வது சிலருக்கு பொருளாதார ரீதியாக சாதகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்றும் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு நிலைகளில் கலப்படம்?
பால் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து நுகர்வோரிடம் சென்றடையும் வரை பல்வேறு கட்டங்களில் கலப்படம் நடைபெற வாய்ப்புள்ளதாக துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார். விவசாயிகள் மட்டத்திலும், பால் சேகரிப்பு மையங்களிலும், குளிரூட்டும் மையங்களிலும் கலப்படம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தடுக்க, பால் எங்கிருந்து வருகிறது என்பதை முழுமையாகக் கண்காணிக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் தடமறிதல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பால் சேகரிப்பு மையமும் எந்த விவசாயியிடமிருந்து எவ்வளவு பால் வாங்குகிறது என்பதற்கான பதிவை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும், நிராகரிக்கப்படும் பால் குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இதுபோன்ற பதிவுகளை டிஜிட்டல் முறையில் கண்காணிப்பதன் மூலம், ஒரு கிராமத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றிடமிருந்து தினசரி கிடைக்கக்கூடிய பால் அளவுடன் ஒப்பிட்டு, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பால் வருகிறதா என்பதையும் கண்டறிய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கும் அடையாளம்?
கால்நடைகளுக்கு காது அடையாளக் குறியீடு (Ear Tagging) பொருத்தும் நடைமுறை ஏற்கெனவே உள்ளது என்றும் துக்காராம் முண்டே குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் National Digital Livestock Mission (NDLM) தளத்துடன் இந்த கால்நடை அடையாளங்களை இணைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளின் அடையாளத் தகவலையும், பால் கொள்முதல் விவரங்களையும் இணைத்து கண்காணித்தால், பாலில் நடைபெறும் பெரும்பாலான கலப்படங்களைத் தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். செயற்கை அல்லது ரசாயனப் பாலை தயாரிப்பவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பொருளாதார குற்றங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை பால், இயற்கையான பாலில் என்ன வித்தியாசம்?
இயற்கையான பால் என்பது புரதம், கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை சமநிலையாகக் கொண்ட இயற்கையான உணவு என பெங்களூரு Cytecare Hospitals-ன் GI & HPB Surgery மூத்த ஆலோசகர் டாக்டர் ஆதித்யா வி. நராகுண்ட் தெரிவித்துள்ளார். ஆனால், செயற்கை அல்லது ரசாயனக் கலப்படம் செய்யப்பட்ட பால், உண்மையான பாலின் தோற்றம் மற்றும் அடர்த்தியைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக மாற்றப்படலாம். அதே நேரத்தில், இயற்கையான பாலில் கிடைக்கும் ஊட்டச்சத்து இதில் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஜகதீஷ் ஹிரேமத் கூறுகையில், பாலில் சோப்பு அல்லது காஸ்டிக் சோடா போன்ற கலப்படப் பொருட்கள் இருந்தால், வயிற்று அசௌகரியம், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற உடனடி பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட காலத்திற்கு தொடர்ந்து இதுபோன்ற பொருட்களுக்கு ஆளானால், செரிமான அமைப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே நீண்டகால உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டவர்கள் இதனால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் பாலில் கலப்படம் எந்த அளவுக்கு உள்ளது?
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னேறியுள்ள போதிலும், நாட்டின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான பால் விநியோகச் சங்கிலி காரணமாக பாலில் கலப்படம் செய்வதை கண்டறிவது தொடர்ந்து சவாலாக இருப்பதாக டாக்டர் ஜகதீஷ் ஹிரேமத் தெரிவித்துள்ளார். பால் பல்வேறு நபர்கள் மற்றும் மையங்கள் வழியாகச் செல்லும் நிலையில், எந்த கட்டத்தில் கலப்படம் நடந்தது என்பதை கண்டறிவது கடினமாக இருக்கலாம்.
எனவே, டிஜிட்டல் முறையிலான தடமறிதல், விவசாயிகளின் துல்லியமான பதிவுகள் மற்றும் கால்நடைகளுக்கான அடையாள அமைப்புகள் ஆகியவை கண்காணிப்பை மேம்படுத்த உதவும் என அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், வழக்கமான ஆய்வுகள், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே கலப்படப் பாலை கண்டுபிடிக்க முடியுமா?
பாலின் வாசனை, சுவை, அதிகப்படியான நுரை அல்லது வழக்கத்திற்கு மாறான அடர்த்தி போன்றவற்றில் மாற்றம் இருந்தால் சந்தேகம் ஏற்படலாம். ஆனால், இதுபோன்ற வீட்டு முறைகள் மூலம் பால் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதியாகக் கண்டறிய முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரசாயனக் கலப்படங்கள் மற்றும் நவீன முறையில் செய்யப்படும் கலப்படங்களை கண்டறிய ஆய்வகப் பரிசோதனையே நம்பகமான வழி என டாக்டர் ஆதித்யா வி. நராகுண்ட் தெரிவித்துள்ளார்.
எனவே, நுகர்வோர் நம்பகமான மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் பால் அல்லது சரிபார்க்கப்பட்ட உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து பாலை வாங்க வேண்டும். பால் பாக்கெட்டின் நிலை, காலாவதி தேதி ஆகியவற்றைச் சரிபார்த்து, வாங்கியவுடன் முறையாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். நிறம், அடர்த்தி அல்லது சுவையில் விளக்கம் அளிக்க முடியாத மாற்றங்கள் இருந்தால் அந்தப் பொருளைத் தவிர்ப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், முறையான குளிர்சாதனப் பாதுகாப்பு பாக்டீரியா மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்றும், இது ரசாயனக் கலப்படத்திலிருந்து தனித்துவமான மற்றொரு முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னை என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read: லிவ்-இன் உறவில் திடீர் தகராறு… டிராலி பேக்கில் பெண்ணின் சடலம்!



