அமாவாசை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிப்படக்கூடிய ஒரு முக்கியமான நாள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய அமாவாசை தினம், மாதம் மாதம் வந்தாலும் இந்த மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அது தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசியில் வரும் அமாவாசை ஆகும். இதில் முதலாவதாக வருவது தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசைதான்.
இந்த வருடம் இந்த ஆடி அமாவாசை இன்று புதன்கிழமை (12.8.2026 ) நிகழ்கிறது. இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனை நாம் எப்படி கடைபிடிக்க வேண்டும்? முன்னோர்களை எப்படி வணங்க வேண்டும்? பித்ரு தர்பணம் செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
அதாவது, அமாவாசையில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருகிறார்கள் என்று எதனடிப்படியில் சொல்லப்படுகிறது என்றால், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்கள என்று சொல்லப்படும் பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அப்படி வரும்போது அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள்தான் இந்த ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படிவழிபாடு செய்து அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது .
மேலும், நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி அமாவாசை என்றும் அவர்கள் மீண்டும் பித்ருலோகத்துக்கு திரும்பிச் செல்லும் நாள் தை அமாவாசை ஆகும்.. அதனால் இதில் ஆடி அமாவாசை என்பது மிக சிறப்புடைய நாளாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ஆடி அமாவாசையில் நாம் என்னெவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் முன்னோர்களின் ஆசி அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் கிடைக்கும். அதனுடன் அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள். அதனால் அன்றைய தினம் குறிப்பாக ஆடி அமாவாசையில் தர்பணம் செய்தல் அவசியம்.
அதற்காக முதலில் அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
அமாவாசயில் எள் தானம் செய்தல் நல்லது. ஆம் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
பித்ருசாப நிவர்த்தி செய்தல் அவசியம். அதற்கு அமாவாசை நாளில் ஆடை தானம் செய்தல் என்பது மிக முக்கியமான விஷயம்.. இதனால் உங்கள் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது, கண்டாதி தோஷம் ஆகியவை விலகும்.
இந்த நாளில் பசு தானம் செய்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் அனைத்தும் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் வேலை செய்யும் போது வரும் தடைகள் அனைத்தும் நீங்கும்.
மேலும், இன்றைய நாளில் அன்னதானம் செய்வது சிறப்பு.. முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது தலைமுறைகே தோஷம் நீங்கும்.. அதனால் அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
செய்யக்கூடாதவை : நம்முடைய வீட்டிற்கு வரப்போகும் முன்னோர்கள் வரவேற்பது போல வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்வதை முதல் நாளே செய்தல் அவசியம்..
அதே நேரத்தில் அமாவாசை நாளில் மறந்தும் நாம் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை நாளில் அசைவம் சமைக்கக்கூடாது. காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைக்க வேண்டும்.


