சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு (Prediabetes) உள்ளவர்கள் பொதுவாக சாதம், ரொட்டி, பிரெட், இனிப்பு போன்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற சிறிய துணை உணவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்தப் பொருட்கள், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு, ஊறுகாய், அப்பளம், சட்னி என அனைத்தையும் ஒரே வகையாகப் பார்த்து நல்லது அல்லது கெட்டது என்று கூற முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கும் முறை, எடுத்துக்கொள்ளும் அளவு மற்றும் அவற்றுடன் சேர்த்து சாப்பிடப்படும் உணவு ஆகியவற்றைப் பொறுத்தே ரத்தச் சர்க்கரையில் ஏற்படும் தாக்கம் மாறுபடும்.
உதாரணமாக, சில சட்னிகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மூலிகைகள் இருக்கலாம். அதே நேரத்தில், சில சட்னிகளில் அதிக அளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கப்பட்டிருக்கலாம். இதேபோல், அப்பளம் மற்றும் ஊறுகாயிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறைக்கு ஏற்ப அவற்றின் தாக்கம் மாறுபடும்.
கனிக்கா மல்ஹோத்ரா, உணவியல் நிபுணர் மற்றும் நீரிழிவு நோய் கல்வியாளர் கூறுகையில், ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவை உணவுக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். ஆனால், அவற்றின் தாக்கம் எந்தப் பொருளை எவ்வாறு தயாரித்து, எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கடுகு எண்ணெய் மற்றும் வினிகர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாயை சிறிய அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள அசிட்டிக் அமிலம் இரைப்பை காலியாகும் வேகத்தைக் குறைத்து, உணவுக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை திடீரென அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படும் புதினா அல்லது கொத்தமல்லி சட்னியில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் புரதமும் கிடைக்கக்கூடும்.
ஆனால், எண்ணெயில் பொரித்த அப்பளம் அல்லது அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட தக்காளி சட்னி போன்றவை இதற்கு நேர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், அதிகமாகச் சூடுபடுத்தப்பட்ட கொழுப்பு அல்லது மறைமுகமாக சேர்க்கப்படும் சர்க்கரை இருக்கக்கூடும். இதனால் உணவின் மொத்த கிளைசெமிக் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு உள்ளவர்கள் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற துணை உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் வகை, தயாரிப்பு முறை மற்றும் எடுத்துக்கொள்ளும் அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: லிவ்-இன் உறவில் திடீர் தகராறு… டிராலி பேக்கில் பெண்ணின் சடலம்!



