மும்பை நிலச்சரிவு: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சக்காரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து:
மும்பையின் குர்லா பகுதியில் உள்ள சிராக் நகர் அருகே கவுசியா சாவ்ல் பகுதியில் அதிகாலை சுமார் 3.48 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலைப்பகுதியின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், மண் மற்றும் பாறைகளுடன் கூடிய இடிபாடுகள் அருகில் இருந்த குடியிருப்புகள் மீது விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் சில பாதிக்கப்பட்டன.
2 பேர் உயிரிழப்பு:
நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். இதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம்:
இந்த விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி 4 முதல் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில செய்தி நிறுவனங்கள் 6 முதல் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகள் தீவிரம்:
தகவல் கிடைத்ததும் மும்பை தீயணைப்புப் படையினர், போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இடிபாடுகளை அகற்றி, அதற்குள் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைக்கு மத்தியில் பதற்றம்:
மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியை ஒட்டிய மலைப்பகுதி சரிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



