சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது.
இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர தின விழாவின் போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் எனவும், தேசியக் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும், உயர்நீதிமன்ற பதிவுத்துறை, உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு, கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுரைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.



