சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாரதிய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட தேசியக்கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி, தியாகிகளின் தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக்கொடி பேரணி நடத்த பா.ஜ.க. சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டது. முதலில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாகவும், பின்னர் மாற்று வழித்தடங்களாகவும் அனுமதி கோரியபோது, போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது.
ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கும் காவல்துறை, தேசியக்கொடி பேரணிக்கு மட்டும் பாரபட்சமாக அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி, அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான அவசர விசாரணையின் போது, காவல்துறையின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கும் அனுமதியில்லை, பா.ஜ.க.விற்கும் அனுமதியில்லை, ஆனால் த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா?” என்று தமிழ்நாடு அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், “கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ அமைந்திருக்கிறதா? நமது நாட்டின் தேசியக் கொடியை ஏந்திப் பேரணி செல்வது என்ன பாவச் செயலா?” என்றனர்.
சுதந்திர தினத் தேசியக்கொடி பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் உடனடியாக கலந்து பேசி சுமூக முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : தமிழக மதுபிரியர்களுக்கு ஷாக்..! 11 வகை மதுபானங்கள் விற்பனை நிறுத்தம்..!



