டெல்லியில் நடைபெற்று வரும் 2026 பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி கணக்கைத் தொடங்கி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 17) இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர்க்கான முதல் சுற்றுப் போட்டியில், அயர்லாந்தின் சோபியா நோபிளை எதிர்த்து சிந்து களம் கண்டார். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற அனுபவம் கொண்ட சிந்து, ஆரம்பம் முதலே போட்டியில் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தினார்.
உலகத் தரவரிசையில் 141-வது இடத்தில் உள்ள சோபியாவுக்கு எதிராக முதல் செட்டிலேயே 8-0 என்ற கணக்கில் அதிரடி முன்னிலை பெற்ற சிந்து, சோபியாவுக்கு எவ்வித வாய்ப்பையும் வழங்கவில்லை. இறுதியில் வெறும் 29 நிமிடங்களில் 21-7, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சோபியாவைத் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி மூலம் தொடரின் 32-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள சிந்து, தனது அடுத்த ஆட்டத்தில் கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதவுள்ளார். அடுத்த சுற்றிலும் இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கு முன்னதாக தனது இலக்குகள் குறித்துப் பேசிய சிந்து, சொந்த நாட்டில் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், 2019-க்குப் பிறகு மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்போடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி மீண்டும் பதக்கம் வெல்வதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



