குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆஸி. வீரர் டேவிட் வார்னர்!. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!.

DavidWarner

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு, சிட்னியில் உள்ள வேவர்லி உள்ளூர் நீதிமன்றம் 1,500 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.01 லட்சம்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் ஒரு வருடத்திற்கு வாகனத்தில் பிரீதத்லைசர் லாக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை நாட்களில், சோதனைச் சாவடிக்கு அருகில் தனது வேனை ஓட்டிச் சென்றபோது பாதியிலேயே வண்டியை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது மேற்கொள்ளப்பட்ட சுவாசப் பரிசோதனையில் அவர் போதையில் இருந்தது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 39 வயதான டேவிட் வார்னருக்கு, நீதிபதி கிளார் ஃபார்னன் முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், வார்னர் அடுத்த ஒரு வருடத்திற்கு “இன்டர்லாக்” உரிமத்தின் கீழ் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். இந்த நிபந்தனையின்படி, வார்னரின் வாகனத்தை இயக்க வேண்டுமானால், அவர் பிரீதத்லைசர் கருவியைப் பயன்படுத்தி தனது சுவாசத்தில் மது அருந்தியதற்கான அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்; மதுவின் தாக்கம் கண்டறியப்பட்டால் வாகனம் இயங்காது.

வார்னர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவாய்ஸ் அஹமது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது ஒரு தீவிரமான தவறு என்பதை வார்னர் உணர்ந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் தன் மீதான தவறுக்கு முழுப் பொறுப்பேற்று, போக்குவரத்து குற்றவாளிகளுக்கான புனரமைப்புத் திட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக கூறினார். எனினும், இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டதால், வார்னரின் பன்னாட்டு வணிக வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கடுமையான பொது விமர்சனங்களைச் சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தச் சம்பவத்தின்போது வேறு யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் செயல்களை பொதுமக்களிடையே தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்காலத்தில் அவர் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டார் என்று தான் நம்புவதாகவும் நீதிபதி தெரிவித்தார். தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கும் வகையில், வார்னர் நேரடியாக தனது காரில் ஏறிச் சென்றார்.

1newsnationuser5

Next Post

முதியோருக்கு இலவச மருத்துவக் காப்பீடு.. 30+ வயதினருக்கு இலவச உடல் பரிசோதனை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Tue Aug 18 , 2026
வயது முதிர்ந்த காலத்தில் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் குடும்பங்களின் பொருளாதார சுமையை அதிகரித்து வரும் நிலையில், முதியவர்களுக்கான மருத்துவ பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு புதிய சுகாதாரத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது. அதேபோல், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுதோறும் இலவசமாக அடிப்படை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் […]
assemblycmvijay

You May Like