தேசிய தேர்வு முகமை (NTA) தனது தேர்வு முறையில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தனது குழுக்களிலிருந்து 600 நிபுணர்களை நீக்கிவிட்டு, புதிய வல்லுநர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் முன்பாக வினாத்தாள்களை நான்கு கட்டங்களாகத் தீவிர ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஏராளமான உண்மைப் பிழைகள், அச்சுப் பிழைகள், மொழிபெயர்ப்பு தவறுகள் மற்றும் தவறாக அமைக்கப்பட்ட கேள்விகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, வினாத்தாள்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் உண்மை, மொழி, மொழிபெயர்ப்பு மற்றும் வடிவமைப்புப் பிழைகளைக் கண்டறிந்து நீக்குவதற்காக இந்த 4 அடுக்கு சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படுகிறது.
கல்வி அமைச்சருடன் தொடர் ஆய்வுக் கூட்டம்:
நேற்று செவ்வாயன்று நடைபெற்ற தொடர் ஆய்வுக் கூட்டத்தில், NTA-வின் தலைமை இயக்குநர், இந்த நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் விரிவாக விளக்கினார். முன்னதாகத் திங்கள்கிழமை நடைபெற்ற முதற்கட்ட ஆய்வின்போதே, NTA-வின் தேர்வு நடைமுறைகள் குறித்து விரிவான தணிக்கை செய்ய உத்தரவிட்ட அமைச்சர், எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் கோரியிருந்தார். மேலும், தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
NTA அமைச்சகத்திடம் தெரிவித்த முக்கிய விவரங்கள்:
புதிய அதிகாரிகள் நியமனம்: அடுத்த 2 முதல் 3 வாரங்களில் 20 முதல் 25 புதிய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.
பாதுகாப்பு பலப்படுத்துதல்: தேர்வுப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) குழுக்கள் பணியமர்த்தப்படும்.
புதிய வளாகம்: NTA அலுவலகங்கள் போர்க்கால அடிப்படையில் புதிய வளாகத்திற்கு மாற்றப்படும்.
இரகசியச் செயல்பாடுகள் மாற்றம்: இரகசியப் பணிகளுக்கான தனி அறைகள், இணைய இணைப்பு இல்லாத கணினி அமைப்புகள் மற்றும் சாதன வைப்பு நெறிமுறைகள் (Device deposit protocols) உள்ளிட்டவை முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
நிறுவனத்தின் விரிவான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 50-க்கும் மேற்பட்ட NTA ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், NTA-வை நவீனப்படுத்தும் நோக்கில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி மற்றும் தேர்வுப் பாதுகாப்பு, ஆராய்ச்சி, உளவியல் அளவியல் ஆகியவற்றுக்கான பொது மேலாளர்கள் உட்பட 10 உயர் தொழில்முறை பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. இணையப் பாதுகாப்பு, உளவியல் அளவியல் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு போன்ற துறைகளில் தனியார் துறை வல்லுநர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.



