சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் மாநாட்டின் நிறைவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை, முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
தென் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படைத் தேவைகள், சவால்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் மின்சாரம் மற்றும் வாகனப் பயன்பாட்டுத் தேவைகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், தென்மண்டல கவுன்சிலின் அடுத்தகட்ட மாநாட்டை தெலங்கானா மாநிலத்தில் நடத்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறினார். மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களின் எண்ணிக்கையும், தமிழகத்திற்குரிய 39 நாடாளுமன்ற இடங்களும் எவ்விதக் குறைப்பும் இன்றி அப்படியே தொடர வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்றும், மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படும் மறுவரையறை நடவடிக்கைகள் பெரும்பாலும் தென் மாநிலங்களையே கடுமையாக பாதிக்கும் என்றார்.



