தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் கூச்சலை தொடர்ந்து, அவையின் மாண்பை குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு முன்னோக்கி ஓடிவரும் எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் கோப்புகள் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது விவாதம் அனல் பறக்கத் தொடங்கியது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் உடனடியாக எழுந்து எதிர்வாதங்களை முன்வைத்தனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை தடையின்றி பேச அனுமதிக்குமாறு வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பிய நிலையில், ஆளுங்கட்சியான தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷமிட்டனர். வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பிலும் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து அவையின் மையப்பகுதியை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவையில் நிலவிய பதற்றத்தை தணித்து உறுப்பினர்களை அமைதிப்படுத்திய சபாநாயகர் பிரபாகர், பொதுக்கூட்ட மேடைகளில் நடந்துகொள்வது போல் கைகளை உயர்த்திக்கொண்டு அவையின் முன்பக்கமாக ஓடிவருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக, குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டி எச்சரித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் தருணங்களில் ஆளுங்கட்சி தரப்பில் இருந்தே அதிகப்படியான குறுக்கீடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
சட்டமன்ற விதிகளை மீறி, எந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினராக இருந்தாலும் சரி, இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையத்தை நோக்கி அத்துமீறி வந்தால் அவர்கள் மீது பாரபட்சமின்றி அவை விதிகளின்படி உரிய நடவடிக்கை பாயும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
Read More : எங்களுக்கு கார் வேண்டாம்..!! அதற்கு பதில் இதை பண்ணுங்க..!! MLA சௌமியா அன்புமணி அதிரடி அறிவிப்பு..!!



