தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் இலவச கார் தேவையில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்திருந்ததை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி தங்களின் நிலைப்பாட்டை விளக்கினார். அப்போது பேசிய அவர், மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த இலவச மின்சாரம் குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், விவசாயிகள் தங்களின் பாசனத் தேவைகளுக்கு நிலத்தடி நீரையும் மின் மோட்டார்களையுமே முழுமையாக நம்பியுள்ளனர் என்றும், வெறும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்து வரும் சூழலில், அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொந்தமாக வாகனங்கள் வைத்துள்ள காரணத்தினால் அரசு வழங்கும் காரை ஏற்றுக்கொள்ள போவதில்லை என தெரிவித்த அவர், புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் ஒதுக்கப்படும் மக்கள் பணத்தை கொண்டு, தங்கள் தொகுதிக்கு தேவையான நவீன நெல் கொள்முதல் நிலையங்களை கட்டிக் கொடுத்தால் அது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.
Read More : சாணியை கரைத்து தலையில் ஊற்றிக் கொண்ட தவெக அரசு..!! அடிப்படை புரிதல் கூட இல்ல..!! விளாசிய துரைமுருகன்..!!



