குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் சில கூட்டு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. Chlorpheniramine Maleate மற்றும் Phenylephrine Hydrochloride ஆகிய இரண்டு மருந்துப் பொருட்களையும் இணைத்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான Fixed-Dose Combination (FDC) மருந்துகளையும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு மருந்துப் பொருட்களும் ஒரே மருந்தில் சேர்த்து பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியான நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
Chlorpheniramine Maleate மற்றும் Phenylephrine Hydrochloride ஆகியவை பொதுவாக சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட அறிகுறிகளுக்கான சில மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த இரண்டு பொருட்களும் சேர்க்கப்பட்ட மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த மருந்துகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாற்று சிகிச்சைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கலவை மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்தின் லேபிள், பாக்கெட்டுக்குள் வைக்கப்படும் தகவல் தாள் மற்றும் விளம்பரப் பொருட்களில் தெளிவான எச்சரிக்கையை குறிப்பிட வேண்டும். அதில், “4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கூட்டு மருந்தை பயன்படுத்தக்கூடாது” என்ற எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
நிபுணர் குழு மற்றும் Drugs Technical Advisory Board (DTAB) வழங்கிய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்துக் கலவையை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு Drugs and Cosmetics Act, 1940-ன் பிரிவு 26A-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2026 ஜூன் மாதத்திலும் மத்திய அரசு 16 வகையான Fixed-Dose Combination மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தடை விதித்திருந்தது. இந்த மருந்துகளுக்கு போதுமான மருத்துவப் பயன்பாடு நிரூபிக்கப்படவில்லை என்றும், அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், கிடைக்கும் மருத்துவப் பயனைவிட அதிகமாக இருப்பதாகவும் அரசு தெரிவித்திருந்தது.
அந்த பட்டியலில் சில வலி நிவாரணி மருந்துக் கலவைகள், சர்க்கரை நோய்க்கான சில கூட்டு மருந்துகள் மற்றும் Amoxicillin, Cefadroxyl, Cefuroxime உள்ளிட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுடன் இணைக்கப்பட்ட சில கலவைகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பு: 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி அல்லது மூக்கடைப்புக்காக எந்த மருந்தையும் மருத்துவரின் ஆலோசனையின்றி கொடுக்காமல் இருப்பது முக்கியம்.
Also Read: 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..



