திருச்சி: தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், முதல்வர் விஜய்யை “வருங்கால பிரதமர்” என அமைச்சர்கள் புகழ்ந்து பேசுவது தேவையற்றது என்று விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து போதிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டினார். விவாதங்களை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து பேசும்போதே ராகுல் காந்தி மனுஸ்மிருதியை குறிப்பிட்டதாக தெரிவித்த கிறிஸ்டோபர் திலக், அவரது கருத்துகளை இந்து மதத்துக்கு எதிரானதாக பாஜக திரித்து கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடைபெறும் சில விவாதங்கள் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டணி கட்சிகள் பொதுமக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது, அவற்றை உடனடியாக பரிசீலித்து உரிய விளக்கம் அளிப்பது அரசுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், தங்கள் கட்சித் தலைவரை மகிழ்விப்பதற்காக முதல்வர் விஜய்யை “வருங்கால பிரதமர்” என அமைச்சர்கள் குறிப்பிடுவது அரசியல் ரீதியாக தேவையற்றது என்றும் கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் புழக்கம், மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இவற்றுக்கு தீர்வு காண்பதுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Also Read: விவசாயிகளுக்கே முக்கியத்துவம்!. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்!. கொந்தளிக்கும் திமுக!.



