கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் போது ஈரானிய உச்சத் தலைவர் அலி காமெனியையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து காமெனியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான மொஜ்தாபா புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், மொஜ்தாபா காமெனி தனது தந்தை மட்டுமின்றி, தனது மனைவி, சகோதரி, சகோதரியின் குழந்தை மற்றும் மைத்துனர் ஆகியோரையும் இழந்துவிட்டதாகக் கூறினார். புதிய தலைவராக பதவியேற்ற பிறகு மொஜ்தாபா பொதுவெளியில் காணப்படவில்லை; அவர் தனது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தந்தையின் இறுதிச் சடங்கின் போது வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், புதிய தலைவர் அலி காமெனியின் தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பழிவாங்க போவதாக சபதம் செய்திருந்தார்.
இந்தநிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது இரண்டு மகன்களில் ஒருவரை ஈரான் படுகொலை செய்ய முயன்றதாக பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டின் சேனலுக்கு பேட்டியளித்துள்ள நெதன்யாகு, “ஒரு நம்பமுடியாத சம்பவம் நடந்துள்ளது: எனது மகன்களில் ஒருவரை ஈரான் குறிவைத்துள்ளது. அவரை கொல்ல ஈரான் முயற்சி செய்தது,” என்று கூறினார்.
இருப்பினும், நெதன்யாகுவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் எந்த மகன் குறிவைக்கப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவரது மூத்த மகன் யாயிர் (35)
, 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவின் மியாமியில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு ஷின் பெட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொதுமக்களின் வரிப்பணம் செலவழிக்கப்படுவதற்கும் இஸ்ரேலில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதேசமயம், தெற்கு புளோரிடாவில் அவர் வசிப்பதால், அந்தப் பகுதி இஸ்ரேலின் எதிரிகளால் தாக்கப்படக்கூடிய இலக்காக மாறக்கூடும் என சில உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் நெதன்யாகுவுக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டிற்கு (Gadi Eisenkot) பாதுகாப்பு வழங்க, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் (Shin Bet) மறுத்துவிட்டதாக வெளியான செய்திகள் குறித்த விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். ஐசன்கோட்டிற்கு முழுநேர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்த நெதன்யாகு, அது “ஆடம்பரம் அல்ல” என்றும், பாதுகாப்பு இல்லையென்றால் ஈரானியர்கள் தங்கள் படுகொலை முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.



