வீட்டில் தினசரி பயன்படுத்தப்படும் முக்கிய மின்னணு சாதனங்களில் மிக்ஸியும் ஒன்று. சட்னி, மசாலா, மாவு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை அரைக்க மிக்ஸி அத்தியாவசியமாக பயன்பட்டு வருகிறது. ஆனால் நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடுகள் மழுங்கி, சரியாக அரைக்காத பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. இதனால் பொருட்கள் மென்மையாக அரையாமல் போகிறது. மேலும் மோட்டாருக்கும் அதிக சுமை ஏற்பட்டு மிக்ஸி விரைவில் பழுதாகும் அபாயமும் உள்ளது.
பொதுவாக மிக்ஸி பிளேடு மழுங்கிவிட்டால், பலரும் மெக்கானிக்கை அணுகுவது வழக்கம். ஆனால் வீட்டிலேயே எளிய முறையில் பிளேடுகளை மீண்டும் கூர்மையாக்கலாம் என வீட்டு பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கல்லுப்பு பயன்படுத்தி மிக்ஸி பிளேடுகளை கத்தி போல கூர்மையாக்க முடியும் என கூறப்படுகிறது.
இதற்காக மிக்ஸி ஜாரில் பிளேடுகள் மூழ்கும் அளவிற்கு கல்லுப்பை நிரப்ப வேண்டும். பின்னர் ஜாரின் மூடியை நன்றாக மூடி மிக்ஸியை இயக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து இயக்காமல் இடைவெளியுடன் ஆன், ஆஃப் செய்து இயக்குவது சிறந்தது. இறுதியாக இரண்டு நிமிடங்கள் அதிக வேகத்தில் சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது உப்பின் உராய்வு காரணமாக பிளேடுகளின் மந்தமான விளிம்புகள் மீண்டும் கூர்மையடையும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், கல்லுப்பு இல்லாதவர்கள் அலுமினியத் தாளையும் பயன்படுத்தலாம். அலுமினிய ஃபாயிலை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு நிமிடம் அதிக வேகத்தில் இயக்க வேண்டும். தாள் துண்டுகள் மற்றும் பிளேடுகளுக்கிடையேயான உராய்வு காரணமாக மழுங்கிய பிளேடுகள் மீண்டும் கூர்மையடையும் என கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த முறைகளை பயன்படுத்திய பிறகு மிக்ஸி ஜாரை நன்றாக சுத்தம் செய்வது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக உப்பு அல்லது அலுமினியத் தாள் மீதிகள் ஜாரில் இருக்கக்கூடாது. அதற்காக தண்ணீர் மற்றும் சிறிதளவு பாத்திரம் கழுவும் ஜெல் சேர்த்து மிக்ஸியை ஒரு முறை சுழற்ற வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீரால் கழுவி, ஜாரை தலைகீழாக வைத்து முழுமையாக உலர வைக்க வேண்டும்.
மேலும் பிளேடுகளில் நீர் தங்கியிருந்தால் துருப்பிடிக்கும் அபாயம் அதிகம் என்பதால், பயன்படுத்திய பிறகு மிக்ஸி ஜாரை முழுமையாக உலர வைப்பது முக்கியம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டிலேயே மிக எளிய பொருட்களை பயன்படுத்தி மிக்ஸி பிளேடுகளை கூர்மையாக்கும் இந்த டிப்ஸ் தற்போது சமூக வலைதளங்களிலும் அதிக கவனம் பெற்று வருகிறது.



