நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் 589 வெளிநாட்டவர்கள் உட்பட 2,498 பேரை இன்னும் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை காற்றுப்புகாத பைகளில் வைத்து அடக்கம் செய்ய நேபாள அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் காண்பதற்காக உடல்களின் மரபணு மாதிரிகள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தனது சமூக வலைத்தளப் பதிவில், “ஒவ்வொரு குடிமகனின் உயிரைக் காப்பதே அரசின் முதன்மையான பணியாகும். அடையாளம் காண முடியாத உடல்கள் மட்டுமே, மரபணு மற்றும் பிற அடையாள ஆதாரங்களைப் பாதுகாத்த பிறகு அரசால் அடக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், வெள்ளத்தின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “ரசுவா பகுதியில் உள்ள போதேகோஷி நதியில் வெள்ளத்தின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், நதிக்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை ஏற்க மறுத்த நேபாள அரசு, காணாமல் போன மற்றும் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் நிலை குறித்து அந்தந்த நாடுகள் அளித்த அழுத்தத்தைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. தற்போது, உள்ளூர் மீட்புப் படையினருக்கு உதவ இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் குழுக்களை நேபாளம் அனுமதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தேசிய பேரிடர் மீட்புப் படையின் வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவையும், அவசரகால மருத்துவ உதவிகளையும் இந்தியா நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்திற்கு தொடர்ந்து உதவ உறுதியாக உள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த உடனடி உதவிக்கு நன்றி தெரிவித்த நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த உதவி “மிகவும் தாராளமானது” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.



