தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெளி ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நிர்வாக முடிவுகள் மற்றும் கொள்கை ரீதியாக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கி வரும் கடும் அழுத்தங்கள், த.வெ.க தலைமைக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.
விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியதும், தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போர்க்கொடி தூக்கியதும் அரசிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் வற்புறுத்துவதும், பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட விவகாரங்களில் தங்களின் முக்கியக் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வி.சி.க தொடர்ந்து நிபந்தனைகள் விதிப்பதும் ஆட்சி நிர்வாகத்தில் கடுமையான முட்டுக்கட்டைகளாக மாறியுள்ளன.
கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய தொடர் நெருக்கடிகள் மற்றும் தலையீடுகளில் இருந்து முழுமையாக விடுபட்டு, எவ்வித சமரசமுமின்றி சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதற்குத் தனிப் பெரும்பான்மை மட்டுமே நிரந்தரத் தீர்வு என முதல்வர் விஜய் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போதைய நிலையில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை உடனடியாகச் சந்தித்து, அவற்றில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் த.வெ.க-வின் பலத்தை 118 என்ற மேஜிக் எண்ணைத் தாண்ட வைக்க முடியும் என வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியை விரைந்து செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவசரப் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் மூலம் சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டால், கூட்டணிக் கட்சிகளின் ஆதிக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டு த.வெ.க-வின் சொந்த பலத்திலேயே நிலையான ஆட்சியைத் தொடர முடியும் என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, எதிர்வரும் இடைத்தேர்தலை தனது அரசாங்கத்தின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாக மாற்ற முதல்வர் விஜய் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : BREAKING | என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்..!! ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மெஸ்ஸி..!!



