முன்னாள் மேற்கத்திய விமானப் படை தளபதியான ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
அறக்கட்டளையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு மகேஷ் பக்சந்த்கா, மதன் மோகன் பாண்டே மற்றும் நிர்மலா யாதவ் ஆகிய 3 புதிய அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த இவர், இந்திய விமானப் படையில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஏப்ரல் 30, 2026 அன்று ஓய்வு பெற்றார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது முக்கிய பங்காற்றிய இவருக்கு சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் (SYSM), அதி விசிஷ்ட சேவா பதக்கம் (AVSM) மற்றும் விசிஷ்ட சேவா பதக்கம் (VSM) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் அன்றாட நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், நிதி மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, பணியாளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பெரிய மத விழாக்களுக்கான ஏற்பாடுகளை இவர் மேற்பார்வையிடுவார்.
AI தொழில்நுட்ப அடிப்படையிலான பரிசீலனை மற்றும் நேர்காணல்கள் மூலம் 5,585 விண்ணப்பதாரர்களில் இருந்து 3 பேர் கொண்ட குழு பரிந்துரைக்கப்பட்டு, இறுதியாக இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



