மகாராஷ்டிராவில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 4 தலைமுறைகள்) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தையை ரதத்தில் வைத்து மேளதாளங்கள் மற்றும் நடனத்துடன் குடும்பத்தினர் விமர்சையாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய ‘கார்கி’ என்ற அந்தப் பெண் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர்.
எங்கள் குடும்பத்தில் இத்தனை ஆண்டுகள் பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இன்று தீர்ந்துவிட்டது. எங்கள் வீட்டிற்கு லட்சுமியே வந்துவிட்டாள்” என்று குழந்தையின் தாத்தா லிம்பாஜி தாஹிஃபாலே மற்றும் பாட்டி சுரேகா ஆகியோர் ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பலரும் ஆண் குழந்தை வேண்டும் என்றே விரும்புவார்கள், ஆனால் பெண் குழந்தை பிறப்பதன் மகிழ்ச்சியே தனி. எங்கள் மகளை பூப்போல வளர்ப்போம்” என்று குழந்தையின் தந்தை நெகிழ்ந்து கூறியுள்ளார்.
பெண் குழந்தைகள் பிறப்பை கொண்டாடும் இந்தச் செயல், சமூகத்தில் பெண் குழந்தைகள் குறித்த குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த விழிப்புணர்வாகவும் நேர்மறைச் செய்தியாகவும் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.



