2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை முன்னிட்டு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து தொடரின் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு ஓய்வு அறிவிக்குமாறு தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் ரோஹித்திடம் கேட்டுக் கொண்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதலால் ரோஹித் சர்மா அதிருப்தி அடைந்தாலும், ஓய்வு பெறச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளாசிய 138 ரன்கள், அவரது ஓய்வு முடிவை தற்காலிகமாக தள்ளிப்போட வைத்தது. இருப்பினும், இந்த அபார சதம் 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடத்தை முழுமையாக உறுதி செய்யவில்லை எனத் தெரிகிறது.
ரோஹித் சதமடிப்பதற்கு முன்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா, ரோஹித் தொடர்ந்து இந்திய அணியின் திட்டங்களில் நீடிப்பார் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்வுக்குழுவின் எண்ணம் வேறாக இருப்பதால், இது தொடர்பாக பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா கடுமையான பரிசீலனையில் இருக்கும் வேளையில், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் எதிர்காலம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாகவே உள்ளது. இருப்பினும், 2027 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இவ்விரு வீரர்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
அதாவது, 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி தீவிர திட்டமிடலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ எடுக்கும் முடிவுகள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும் என எதிரபார்க்கப்படுகிறது.



