கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது ஐதீகம். வழக்கமாக இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது அரிது என்றாலும், இந்த ஆண்டு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் பல மணி நேரம் ஒன்றாக இணைந்து வெள்ளிக்கிழமையில் அமைவது கூடுதல் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் வீட்டில் முறையாக வழிபட கடைப்பிடிக்க வேண்டிய 5 முக்கிய நடைமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வீட்டை தூய்மை செய்தல்:
விசேஷ தினமான வெள்ளிக்கிழமையன்று வீட்டைப் பெருக்கித் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால், வியாழக்கிழமையன்றே இல்லத்தை முழுமையாக சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி தயார் செய்து கொள்வது மங்களகரமானது.
குழந்தை கிருஷ்ணரின் பாதச் சுவடுகள் பதித்தல்:
பச்சரிசி மாவைக் கரைத்து, வீட்டு வாசற்படியில் தொடங்கிப் பூஜை அறை அல்லது கிருஷ்ணர் அமரும் இடம் வரை பிஞ்சுப் பாதங்களின் தடங்களை வரைய வேண்டும். இது ஆலிலை கண்ணன் தனது பிஞ்சு பாதங்களால் வீட்டிற்குள் நடந்து வந்து அருள்பாலிப்பதைக் குறிக்கிறது.
சிலை அல்லது படத்திற்கு எளிய அலங்காரம்:
புதிதாக விக்கிரகங்கள் வாங்க வேண்டிய அவசியமின்றி, வீட்டில் உள்ள கிருஷ்ணர் படம் அல்லது விக்ரகங்களைச் சுத்தப்படுத்தித் துளசி மாலைகள், வண்ண மலர்கள் சூட்டி எளிய முறையில் அலங்கரிக்கலாம்.
விருப்பமான எளிய நைவேத்தியம்:
எண்ணெய் அல்லது நெய் பலகாரங்களை விரிவாகச் செய்ய இயலாதவர்கள் கூட, கண்ணனுக்கு மிகவும் பிரியமான ஒரு சிறிய கிண்ணம் வெண்ணெய், ஒரு கைப்பிடி அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை மனதாரப் படைத்தாலே பரந்தாமனின் பரிபூரண அருள் கிட்டும்.
மாலை நேர வழிபாடு:
வட மாநிலங்களில் நள்ளிரவு பூஜை வழக்கம் இருந்தாலும், தமிழக பாரம்பரியப்படி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தீபமேற்றி, நைவேத்தியங்களை வைத்து, குடும்பத்தோடு பக்திப் பாடல்களைப் பாடி கிருஷ்ணரை வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செய்யலாம்.



