சட்டப் போராட்டம், வேலை தேடலில் ஏற்பட்ட சிக்கல்கள் என பல்வேறு தடைகளை எதிர்கொண்ட மூன்று கன்னியாஸ்திரிகள், தற்போது தங்களது சொந்த காலில் நிற்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். ஒரு தையல் இயந்திரத்தில் தொடங்கிய சிறிய முயற்சி, இன்று இரண்டு பேருக்கு வேலை வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த இந்த மூன்று கன்னியாஸ்திரிகளும் இணைந்து ‘ஸ்டாண்ட் பை மீ’ என்ற பெயரில் ஆடைத் தயாரிப்பு தொழிலை நடத்தி வருகின்றனர். நைட்டிகள், சுடிதார்கள், பைகள், மேஜை விரிப்புகள், மேஜை அலங்காரத் துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
தொழில் தொடங்கியபோது பெரிய அளவில் முதலீடு அல்லது வாடிக்கையாளர் ஆதரவு எதுவும் அவர்களிடம் இல்லை. தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய ஆர்டர்களை வைத்து படிப்படியாக பணியை விரிவுபடுத்தினர். அவர்களது தயாரிப்புகளைப் பார்த்து பலரும் மற்றவர்களிடம் பரிந்துரைக்கத் தொடங்கியதால், ஆர்டர்களும் அதிகரித்தன. தற்போது தொழிலில் இரண்டு ஊழியர்களையும் பணியமர்த்தியுள்ளனர்.
இந்தத் தொழிலுக்குப் பின்னால் ஒரு நீண்ட போராட்டக் கதை உள்ளது. குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், அப்போது ஜலந்தர் மறைமாவட்ட ஆயராக இருந்த பிராங்கோ முலக்கல் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்து 2018-ல் போலீசில் புகார் அளித்தார். 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக மேலும் இரண்டு கன்னியாஸ்திரிகள் களமிறங்கினர். திருச்சபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் கொச்சியில் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2018 செப்டம்பரில் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக மடத்தில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டதாக மூவரும் தெரிவித்துள்ளனர். உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கே சொந்தமாக சம்பாதிக்க வேண்டிய சூழல் உருவானது.
வேலை தேடியபோதும் அவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்களில் இருவர் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், சட்ட வழக்குடன் தொடர்புடையவர்கள் என்ற காரணத்தால் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
அந்தச் சூழலில்தான், யாருடைய உதவியையும் சார்ந்திருக்காமல் தங்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மடத்தில் இருந்த தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தி முதலில் தையல் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். பின்னர் அதையே தொழிலாக மாற்றி, சிறிய அளவில் ஆடைகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர்.
தங்களது முயற்சிக்கு ஆதரவளித்தவர்களின் ஊக்கத்துடன் தொழிலுக்கு ‘ஸ்டாண்ட் பை மீ’ என பெயரிட்டனர். இன்று அந்தச் சிறிய முயற்சி அவர்களது வருமானத்துக்கான வழியாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் வேலை வழங்கும் முயற்சியாக மாறியுள்ளது.
இதற்கிடையில், பிராங்கோ முலக்கலை உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஒருபுறம் சட்டப் போராட்டம் தொடரும் நிலையில், மறுபுறம் மூன்று கன்னியாஸ்திரிகளும் தங்களது உழைப்பின் மூலம் வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
Also Read: இந்திய விண்வெளி திட்டத்தில் மாபெரும் சாதனை! GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!



