மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் இறங்கிஉள்ளன. திமுக சார்பில் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய இருவருக்கும் தவெக சார்பில் இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ளார். அதில், மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த மரகதம் குமரவேல் துணை பொதுச்செயலாளராக உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்தியபாமா திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



