இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் புற்றுநோய் வராது என்று எண்ணி, தொடர் உடல்நலப் பிரச்சனைகளைப் புறக்கணிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மும்பை சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலால் இது குறித்துக் கூறுகையில், “இளைஞர்கள் பலர் ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி எனத் தங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதால், ஆரம்பகால நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகளைப் பலரும் கண்டுகொள்வதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
நுரையீரல் புற்றுநோய் என்றாலே புகைப்பிடிக்கும் முதியவர்களுக்கு மட்டுமே வரும் என்ற பொதுவான கருத்து காலம் காலமாக உள்ளது. புகைப்பிடித்தல் முக்கியக் காரணமாக இருந்தாலும், காற்று மாசுபாடு, புகையிலைக் புகை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) போன்ற ஆபத்தான நச்சுப் பொருட்களின் தாக்கம் காரணமாகப் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உடற்பயிற்சி உடலுக்கு நல்லது என்றாலும், அது புற்றுநோய் அபாயத்தைத் முழுமையாகத் தடுப்பதில்லை. குறிப்பாக, தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை அவர்கள் எளிதாகத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். தொடர்ந்து இருக்கும் இருமலை ஒவ்வாமை அல்லது சாதாரணத் தொற்று என நினைப்பது, மூச்சுத் திணறலை கடுமையான வொர்க்-அவுட் காரணமாக ஏற்படுவதாகக் கருதுவது, சோர்வை மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை எனக் கணக்கிடுவது போன்ற காரணங்களால் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது தாமதமாகிவிடுகிறது.
பின்வரும் அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது காலப்போக்கில் மோசமானாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்: 2 முதல் 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், மூச்சுத் திணறல் அல்லது விசிலடிக்கும் சத்தம் (Wheezing), மார்பக வலி அல்லது தொடர்ச்சியான முதுகு/தோள்பட்டை வலி, திடீர் குரல் மாற்றம் (Hoarse voice), இருமலுடன் இரத்தம் வருவது, மீண்டும் மீண்டும் ஏற்படும் சுவாசத் தொற்று மற்றும் காரணமின்றி ஏற்படும் உடல் சோர்வு மற்றும் எடை குறைவு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் உடனடியாகப் புற்றுநோயைக் குறிக்காது என்றாலும், இவை தொடர்ந்தால் அல்லது நாளுக்கு நாள் அதிகரித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம்தான் என்றாலும், உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் உதாசீனப்படுத்தக் கூடாது.


