ஜிம்பாப்வே தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக, அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து ஆதரித்தது; அதற்குப் பலனாக சாம்சன் 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார். பல ஆண்டுகளாக மாற்று வீரராகவே பார்க்கப்பட்ட 31 வயதான சாம்சன், இப்போது இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். அவருக்குப் பயிற்சியாளர் கம்பீர் முழு ஆதரவளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய கம்பீர், வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டினார். அதே வேளையில், அவருக்கான வாய்ப்பு வரும்போது நிச்சயம் வழங்கப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் வரவிருக்கும் 2026 ஆசியப் போட்டிகளில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரே தொடக்க வீரர்களாகத் தொடர்வார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
“வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்”: வைபவ் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்பது அவரிடம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திறமை எங்களுக்குத் தெரியும். ஆனால், பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்படும் ஒரு வீரர், புதிதாக அணிக்கு வந்தவரை விட முன்னிலையில் இருப்பார். வைபவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்கு நீண்டகால அடிப்படையில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும். இந்திய கிரிக்கெட்டில் போட்டி இருக்க வேண்டும்; திறமையானவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது 15 வயது வீரராக இருந்தாலும் சரி, 30 வயது வீரராக இருந்தாலும் சரி, சில நேரங்களில் வாய்ப்புக்காகக் காத்திருந்துதான் ஆக வேண்டும்” என்று கம்பீர் கூறினார்.
சாம்சனை நீக்கியது மிகக் கடினமான முடிவு: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது வைபவ் சூர்யவன்ஷியை கையாண்ட விதம் குறித்து அணி நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டது. அயர்லாந்து தொடரில் அறிமுகமாகாத அவர், சஞ்சு சாம்சன் மூன்று போட்டிகளில் சொதப்பியதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறக்கப்பட்டார். ஆனால் வைபவும் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்தார். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட சாம்சன், அபிஷேக் சர்மாவுடன் முதல் தரத் தொடக்க வீரராகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார்.
இங்கிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கியது தனது பயிற்சி வாழ்க்கையிலேயே ‘மிகக் கடினமான முடிவு’ என்று கம்பீர் தெரிவித்தார். “சாம்சன் தனது திறமையை நிரூபித்துள்ளார். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஒருவர் திறமை இல்லாமல் வென்றுவிட முடியாது. இதற்கு முந்தைய அவரது சிறப்பான ஆட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கிலாந்து தொடரில் அவரை நீக்கியது என் பயிற்சிப் பயணத்தில் நான் எடுத்த மிகக் கடினமான முடிவு. ஆனால் சில நேரங்களில் வீரர்களின் தற்போதைய ஃபார்மையும் கருத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடிய அதே கூட்டணியைத் தொடரவே நான் விரும்பினேன். தொடர்ச்சியாக தோல்வியடையாமல் உலகக் கோப்பையை வென்ற ஒரு அணியைச் சேர்ந்த வீரர்கள், ஒரு தொடரில் 3 அல்லது 4 முறை சொதப்பியதால் மோசமான வீரர்களாக மாறிவிட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.



