சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு, திடீர் சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் (MGM) ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (செப். 18) மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு தொடர்ந்து சிறப்பு மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
தற்போது அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ அளவீடுகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றன. மேலும், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் அவர் முழுமையாக ஒத்துழைத்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை படிப்படியாகத் தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ள தகவல், அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியினருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


