பணம் கொடுத்தேன் என்று யாராவது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அரவக்குறிச்சி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக அண்ணாமலைக்கு எதிராக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்; பணம் கொடுத்தேன் என்று யாராவது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறினார்.