கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனியார் யூடியூப் சேனலில் பணியாற்றிய ஸ்வேதா (VJ) என்பவர், சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் மாலில் காதல் குறித்து இளைஞர் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது, 23 வயது கொண்ட இளம் பெண் ஒருவரிடம் காதல் குறித்து பேசுமாறு கேட்டுவிட்டு, பின் ஆபாசமாக கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது வீடியோவை யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர்கள், தங்கள் அனுமதியின்றி வீடியோவை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என கூறியதன் பேரில் வீடியோவை அழிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக பேட்டி கொடுத்த இளம்பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆபாசமாக கேள்வி கேட்ட வீடியோவை தங்களது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தோழிகள் மூலம் தகவல் அறிந்த பேட்டி கொடுத்த பெண் அதிர்ச்சி அடைந்து வீடியோவை பார்த்தபோது, ஏராளமானோர் பேட்டி கொடுத்த பெண் குறித்து அவதூறு கருத்துகளால் கமெண்ட் செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 23 வயது இளம்பெண், எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி உள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளம்பெண் அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் ராம் (23), யோகராஜ் (21) யூடியூப் VJ ஸ்வேதா (23) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார் ராம், யோகராஜ், யூடியூப் VJ ஸ்வேதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : பள்ளிகள் திறந்ததும் இந்த தவறை செய்தால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை..!! மாணவர்கள் நிம்மதி..!!