மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் 10 வயது சிறுவனை முதலை விழுங்கியது. நேற்று காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை தாக்கியுள்ளது. முதலை சிறுவனை ஆற்றில் இழுத்துச் சென்றது. சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.. மேலும் குச்சிகள், கயிறு மற்றும் வலை மூலம் முதலையை பிடித்த அவர்கள்அதனை ஆற்றில் இருந்து வெளியே இழுத்தனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்தனர். இரு அணியினரும் கிராம மக்களின் பிடித்து வைத்திருந்த முதலையை மீட்க முயன்றனர். ஆனால், மாலை வரை சிறுவனின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருப்பதாக கருதி, சிறுவனை முதலை வெளியேற்றினால் தான் அதை விடுவிப்போம் என்று கூறினர்.
இதுகுறித்து ரகுநாத்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷியாம் வீர் சிங் தோமர் பேசிய போது “ சிறுவன் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்… குழந்தையை முதலை விழுங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் வலை மற்றும் குச்சிகளை பயன்படுத்தி முதலையை பிடித்தனர். இந்த விவகாரத்தில் வனத்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது..” என்று தெரிவித்தார்
காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் வற்புறுத்தியதை அடுத்து, கிராம மக்கள் முதலையை விடுவித்தனர்.