புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974 வரை 75,000 ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக பசுமையான காடுகளாக இருந்தன. ஆனால், இந்த வனப் பகுதியில் வணிக நோக்கில் யூக்கலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன. இந்த மரங்களை வளர்க்க, பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீர் அதன் ஓடையில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. மேலும், விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, ”நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான், காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்” என்றனர்.
மேலும், ”காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதுக்கோட்டை மாவட்ட வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஏற்படுத்தப்படும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Read More : மக்களே..!! இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?