கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மய்யத்தில் இருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய எண்ணம், சிந்தனை, செயல், பணம் ஆகியவை தேவை. ஆனால், என்னிடம் எண்ணமும், சிந்தனையும் மட்டுமே உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றது.
ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லி பல பேரை திட்டியுள்ளேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளை தட்டிக்கழிக்கும் சோம்பேறி என்று அர்த்தம். மய்யத்தில் நான் செய்ததும் காம்சோர் தான். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை. இந்த உண்மையை வெளிப்படுத்துவதில் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது.
பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். அமெரிக்க அரசியலில் ஒரு Term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாக கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள்.
ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை Career Politician-களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால், அங்குள்ள மக்கள் உணர்ந்தது என்னவென்றால் Career Politician-களைவிட Businessman ஆன Trump எல்லா விதத்திலும் மக்களின் நலனுக்காக போராடுவார். இதைத்தான் அமெரிக்காவின் Founding Fathers-ம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அந்த அரசியலில் இருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.
தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைத்துள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும்.
65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் களத்தில் இறங்கி வேலை செய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும். அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர் பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே” என்று பதிவிட்டுள்ளார்.