திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 40 ஆகிறது. இந்நிலையில், கவிதா தன்னுடைய பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிதா மீது மோதி அருகே இருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவிதா மற்றும் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் கோவை சேர்ந்த சிங்காரவேலன் என்பவரின் மகன் மோகன்தாஸ் (28) என்பது தெரியவந்தது. இவர், ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மோகன் தாஸின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.