HIV: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காததால், எச்.ஐ.வி தொற்று ஊசியை மருமகளுக்கு செலுத்திய மாமியார் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது சீர்வரிசையாக பெண்ணிற்கு, அவரது தந்தை ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். நகை, ஒரு கார் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்ற வரதட்சணையாக கொடுத்துள்ளார். இருப்பினும், மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் உள்பட அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால், திருமணம் நடந்த ஒரு மாதத்தில் மார்ச் 25 2023 அன்று அப்பெண் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊர் பஞ்சாயத்து தலைவர்களின் உதவியுடன் அந்த பெண் மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அதேபோல், வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கணவர் வீட்டார் துன்புறுத்தியுள்ளனர். அதாவது, கூடுதல் வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் அந்த பெண்ணுக்கு அவரது மாமியார் எச்.ஐ.வி தொற்றுள்ள ஊசியை உடலில் செலுத்தியுள்ளார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இது குறித்து பெண்ணின் தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அங்கு புகார் ஏற்கப்படாத நிலையில், உத்தரப்பிரதேசத்தின் சஹர்ன்பூரில் உள்ள நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். அதில்”கடந்த ஆண்டு மே மாதம் என்னுடைய மகளுக்கு அவருடைய மாமியார் எச்.ஐ.வி தொற்றுள்ள சிரிஞ்சை வலுக்கட்டாயமாக செலுத்தினர். அவளுடைய உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. மருத்துவப் பரிசோதனைகள் எனது மகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை” என்று கூறியுள்ளார். இதன்பேரில் சஹர்ன்பூரில் உள்ள நீதிமன்றம், மாமியார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Readmore: ஐபிஎல் 2025!. சென்னை சேப்பாக்கத்தில் CSK – MI போட்டி!. தல தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!.