விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.
விருதுநகர் காரிசேரி அருகே மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக, திருப்பதி 28, என்பவர் மைக் செட் அமைத்து, அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மைக்செட் வயர், அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டு திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைக் கண்ட அவரது ஏழு மாத கர்ப்பிணி மனைவி லலிதா (25) பாட்டி பாக்கியமி (65) ஆகியோர் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தும், கர்ப்பிணி வயிற்றில் வளரும் ஏழு மாத சிசு உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்றச் சென்ற திருப்பதியின் அண்ணன் தர்மர் மற்றும் கவின் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல் துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.