குடிபோதையில் 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது 16 வயது மகளுடன் கடைக்குச் செல்வதற்காக புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, இவரது மகள் கீழே நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி உடனே கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். கும்பல் கூடியதும் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் போலீசார், அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடிபோதையில் வந்த நபர், திருவிக நகர் ஒற்றைவடை 2-வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் (33) என்பது தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே திருவிக நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, திருவிக நகர் போலீசார் வசந்தகுமாரை பிடித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.