ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள மாகாணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் சாம், வீட்டில் பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். பலூனை வாயில் வைத்து ஊதிய போது எதிர்பாராத விதமாக பலுனை சிறுவன் விழுங்கியுள்ளான். அதன் பின்னர் மூச்சுத் திணறி மயங்கியுள்ளார்.
இதைப்பார்த்த அந்தச் சிறுவனின் தாய், உடனே மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு மகனை மடியில் தூக்கி வைத்து தாய் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது. விளையாட்டுப் பொருளான பலூன், 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலூன் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருட்களும், சிறுவர்களுக்குப் பெரும் ஆபத்தாக மாறக்கூடும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைக்கும் பழக்கம் உள்ளது. இதை பெற்றோர் கவனிக்க தவறினால், ஒரு கணத்தில் பேரிழப்பாகி விடுகிறது. பலூன்கள், பட்டாணி, நாணயங்கள், சிறு பொம்மைகள் போன்றவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



