சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. ஜப்பானின் உட்சுனோமியா (Utsunomiya) நகரில், காட்டு கருப்பு கரடி ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மூன்று நாட்களாக வீதிகளில் சுற்றித் திரிந்ததையடுத்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மீட்டர் நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட இந்த ஆசிய கருப்பு கரடி, முதலில் நகரின் பூங்கா ஒன்றின் அருகே காணப்பட்டது.
பின்னர் அது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வழியாக ஓடுவதும், இறுதியாக நள்ளிரவில் தெருவில் ஓடுவதும் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவாகியது. இந்நகரின் வரலாற்றிலேயே இத்தகைய கரடி ஒன்று காணப்படுவது இதுவே முதல் முறையாகும். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகரில் உள்ள 94 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முழுமையாக மூடியுள்ளனர்.
கரடியைப் பிடிக்க காவல்துறை, வனத்துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வேட்டையாடுபவர்கள் சங்கம் ஆகியவை களமிறக்கப்பட்டன. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், கதவு மற்றும் ஜன்னல்களைப் பூட்டி வைக்குமாறும் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த சில ஆண்டுகளில், ஜப்பானில் கரடிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சாதனை அளவை எட்டும் வகையில் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட கரடித் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு கரடித் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழந்தனர்; இது ஒரு சாதனையாகும். சமீபத்தில், ஃபுகுஷிமா (Fukushima) நகரில் உள்ள மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்குள் நுழைந்த கரடி ஒன்று, நான்கு பேருக்குக் காயத்தை ஏற்படுத்திவிட்டு, தானாகவே பூட்டிக்கொள்ளும் ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்றது.
காடுகளில் கரடிகள் உண்ணும் ஓக் (oak) பழங்கள் மற்றும் கொட்டைகளின் பற்றாக்குறைக்குக் காலநிலை மாற்றமே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வயல்வெளிகள் தரிசு நிலங்களாக மாறி வருவதால், காட்டு விலங்குகள் எளிதாக நகரங்களை நோக்கி வருகின்றன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கரடிகளின் நடமாட்டத்தைத் தடுக்க ஜப்பானிய அரசு ஒரு சிறப்புப் பணிக்குழுவையும் அமைத்துள்ளது. இது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை நீங்கள் காணலாம்.
Read More : பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! வன்முறை மோதல்களில் 11 பேர் பலி.. என்ன நடந்தது..?



