மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக இன்று காலை, விழாவுக்கு வரும் வழியில் மாணவ மாணவிகளை சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டதுடன், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை – பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது. டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ் அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல. சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்? குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ். தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போகிறது. அதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா? என்றார்.
Read more: ரூ.1000 கோடி.. இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையை இழக்கிறார்கள்… காரணம்?