கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் செய்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்து சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதையடுத்து காவல் உதவி கண்காணிப்பாளர் மகேஷ், பல அரசியல் கட்சி பிரமுகர்கள் செங்குறிச்சி சுங்கச்சாவடிக்கு சென்று போராட்டம் செய்யும் ஊழியர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் 30 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாததை தொடர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் எந்தவித கட்டணமும் இன்றி அனுப்பப்பட்டன.