திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாயுடுபுரத்தில் ஜெய் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை ஒன்று இருக்கிறது. இங்கே போலி மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதாக மாவட்ட சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கனகராணி அவர்களின் தலைமையில், தேசிய நல குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி, மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாக அலுவலர் முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் போன்ற குழுவைச் சார்ந்தவர்கள் அந்த மருந்தகத்திற்கு சென்று திடீரென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த கோகிலா என்ற நபர் மருந்து கடையின் பின்புறமாக தனி அறையில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்தது இந்த ஆய்வில் தெரியவந்தது. மருத்துவ ஆய்வு குழுவினரிடம் முதலில் அவர் தன்னை ஒரு மருத்துவர் என்று தெரிவித்து அறிமுகம் செய்து கொண்டார்.
அதன் பிறகு நடந்த விசாரணையில் குப்புசாமி நாயுடுபுரம் லட்சுமி மில் பகுதியை சார்ந்த சின்னராசு அவர்களின் மனைவிதான் கோகிலா(30) என்ற விவரமும், அவர் மருத்துவம் தொடர்பாக எந்தவிதமான படிப்பையும் மேற்கொள்ளவில்லை என்ற விவரமும் தெரியவந்தது. 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த நிலையில், இந்த தொழிலில் கடந்த 8 வருட காலங்கள் அவர் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது, மருந்து கடைக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, காயங்களுடன் வருபவர்களுக்கு கட்டு போடுவது, மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட செயல்களை அவர் செய்து வந்திருக்கிறார். சிறிய அளவில் மருத்துவமனை நடத்த வேண்டும் என்றாலும் கூட அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.
சரியான அனுமதியும் பெறாமல் கல்வித் தகுதியும் இல்லாமல் ஆங்கில மருந்துகளை வைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.
அதேபோல ஒரே சிரஞ்சில் பல நபர்களுக்கு ஊசிகளை செலுத்தி வந்துள்ளார். இது மிக, மிக ஆபத்தான ஒன்றாகும். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்ற காரணத்தால், பொதுமக்களும் இதில் இருக்கின்ற ஆபத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.
ஆகவே நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மருத்துவமனையின் பின்புறம் சுமார் 700 ஊசிகளுக்கு மேல் எங்களுடைய ஆய்வின் கைப்பற்றப்பட்டது. ஆனால் சிரஞ்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் கோகிலாவின் மீது பல்லடம் காவல்துறையினரிடம் தேசிய நலக்குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு புகார் வழங்கினார். இந்த புகாரினடிப்படையில், காவல்துறையினர் கோகிலாவை கைது செய்து சிறையிலடைத்தனர். அத்துடன் தனியார் மருந்து விற்பனை கடையையும் பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள் இந்த மருத்துவ குழுவை சார்ந்தவர்கள்.
பல்லடத்தில் 3 தினங்களுக்கு முன்னர் மூல நோய்க்கு சிகிச்சை வழங்குவதாக மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் கோகிலா என்ற பெண் போலி மருத்துவர் அதே பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.