டெல்லி மாநிலம் ஐபி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் அசோக் சிங் (64). இவர், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு மனைவியும், ஆதித்தியா சிங் என்ற 23 வயது மகனும் உள்ளனர். இவரது மகன் ஆதித்தயா குருகிராம் பகுதியில் கம்ப்யூடர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தந்தை அசோக் சிங் சமீபத்தில் குருகிராம் பகுதியில் புதிதாக பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதற்கான தொகையை அசோக் சிங் மொபைல் ஆப் மூலம் செலுத்த வேண்டும். நேற்று சனிக்கிழமை பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தனது மனைவியிடம் ஆப்பை டவுன்லோட் செய்து பணத்தை செலுத்த கூறியுள்ளார். ஆனால், அப்ளிகேஷன் டவுன்லோட் ஆகி பேமெண்ட் செய்ய தாமதமாகியுள்ளது. இதனால், ஆசோக் ஆத்திரமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது பெரிய சண்டையாக வெடித்துள்ளது. அப்பா அம்மாவுக்கும் இடையே சண்டையைத் தடுத்து சமாதானம் செய்ய மகன் ஆதித்தியா இடையில் சென்றுள்ளார். அப்போது அசோக் மற்றும் மகன் ஆதித்தியாவுக்கு சண்டை ஏற்படவே, கோபத்தில் தனது மகனை வீட்டில் இருந்த கத்தியால் இரு முறை அசோக் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆதித்யா, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அசோக் சிங் மீது இபிகோ 324 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது. ஆதித்யா ஆபத்தான நிலையை தாண்டியதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.