உத்திரபிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பு கடித்து இறந்ததாக சொல்லப்பட்ட சிறுவன் தற்போது இளைஞனாக உயிருடன் தனது சொந்த ஊர் திரும்பி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலத்தின் தியோரியா மாவட்டத்தைச் சார்ந்தவர் ராம் சுமர் யாதவ். இவரது மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது பாம்பு கடித்ததால் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களது வழக்கப்படி வாழைத்தண்டில் உடலை வைத்து சரயு ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து உயிருடன் திரும்பி இருக்கிறார் அங்கேஷ் யாதவ். இதுகுறித்து கூறிய அவர் “சுயநினைவு திரும்பியதும் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்தேன். பீகாரைச் சார்ந்த பாம்பு மந்திரி அமன் மாலி என்பவர்தான் என்னை காப்பாற்றினார். என்னை வளர்த்து அவருடன் சிறிது நாட்கள் வைத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு இருக்கும்போது ஒரு ட்ரக் ஓட்டுனரிடம் என்னுடைய வாழ்க்கையை பற்றி கூறிக் கொண்டிருந்தேன். அவர் என்னை எனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். இதனால் நான் என் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தேன் என தெரிவித்திருக்கிறார். 15 வருடங்களுக்கு முன்பு இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த மகன் இளைஞனாக உயிருடன் வீடு திரும்பி இருப்பது அவர்களது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது .