திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்றிரவு வானில் பறக்கும் ரயில் போவது போன்ற தெரிந்த ஒளியை இளைஞர்கள் வீடியோ எடுத்தனர். சிலர் இதனை வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இதனை ஆத்மாக்களின் அணி வகுப்பு என்றும், இது வேற்று கிரக வாசிகளின் வாகனம் என்றும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வானில் தோன்றிய இந்த மர்ம ரயில் என்னவென்று குறித்து இதுவரை தெரியவில்லை.
இதேபோல் ஒரு சம்பவம் கடந்த செப்டம்பரில் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது, அப்போது அதனை பதிவு செய்த மக்கள் இணையத்தில் வைரல் ஆக்கினர், மேலும் அப்போது உத்தரபிரதேசத்தில் வானில் தெரிந்த ஒளி எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் என கூறப்பட்டது.
மேலும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் மூலம் உலகில் இணையத்தை எளிதாக வழங்க முடியும். இதன் பெயர் ஸ்டார் லிங்க் திட்டம். எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் திட்டத்திற்காக கடந்த 2 வருடமாக 2200 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளார். இவை வானில் சுற்றிவருவதை நம்மால் இரவு நேரத்தில் பார்க்க முடியும். அதன் ஒரு செயற்கைக் கோள் பறந்து சென்றபோது தான், உத்திரப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர் என அப்போது கூறப்பட்டது.
அதே ஸ்டார் லிங்க் தான் தற்போது தமிழ்நாட்டிலும் தெரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மேலும் இந்த ஸ்டார் லிங்க் செயற்கை கோள்கள் இரவு நேரத்தில் வானில் தெரிவதால் இதனை ஏலியன்கள் என மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர்.