மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கண்களில் மிளகாய் பொடி தூவி, அந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தலையில்லாமல் இளைஞரின் உடல் இருப்பதையும், அதன் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இளைஞரின் தலையை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.