திருமணத்திற்கான புதிய செயலி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த செயலி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. தொழில் முறையிலும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் என்பது நடுத்தர வர்க்க மக்களின் தவிர்க்க முடியாத ஒரு சுமையாக தற்காலங்களில் இருந்து வருகிறது. இதற்காக கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவிற்கு வட்டித் தொகையை தங்களது பயனாளர்களிடமிருந்து வசூல் செய்து வருகின்றன.
திருமண வயதை அடைந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்வதற்கு பணம் மிகவும் இன்றியமையாத ஒன்று. திருமண நிகழ்வுகளுக்கும் அதன் ஏற்பாட்டிற்கும் என்று பெரும் தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காகவே பயந்து பலரும் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது அந்த செயலி திருமணத்திற்கு இ.எம்.ஐ முறையில் கடன் வழங்கும் திட்டத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேரி நவ் பே லேட்டர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் தற்போது இணையதளத்தில் டிரெண்டிங்காக இருக்கிறது. இதற்கு பல நபர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒருவேளை இந்த செயலியில் கடன் வாங்கி திருமணம் செய்துவிட்டு கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் மனைவியை கடத்தி விடுவார்களா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் .